முல்லைத்தீவில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கல ஆம்பருடன் நபர் ஒருவர் கைது
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் பல கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 850 கிராம் திமிங்கல ஆம்பருடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வனவிலங்கு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொக்கிளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முல்லைத்தீவு வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலக அதிகாரிகள் இணைந்து கொக்கிளாய் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஆம்பரைக் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு, வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆம்பர் காணப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளர் பல கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு தயார் செய்ததையும் வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு வனஜீவராசிகள் அதிகாரி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
திமிங்கல ஆம்பர் என்பது ஒரு வகை திமிங்கலத்தால் வாந்தி எடுத்த பிறகு நீண்ட நேரம் கடலில் மிதக்கும் ஒரு வகையான கட்டியான பொருள்.
உலகின் அரிதான வாசனை திரவியங்கள் மற்றும் உணவுகள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக அதிக விலைக்கு விற்கப்படுவதால்,ஆம்பர் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.