யாழ்ப்பாணத்தில் கணவன் படுகொலை - மனைவி, மாமனார் உட்பட 11 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் கணவனை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 21ஆம் திகதி இரவு தனது கராஜில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியுள்ளது.
தாக்குதலாளிகளிடம் இருந்து அவர் தப்பியோடிய போது, அவரை வீடு வரை துரத்தி சென்று, வீட்டு வாசலில் வைத்து மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலையான நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது வாகன திருத்தகத்தில் தங்கி இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட்ட விசாரணையில் கொலையானவரின் மனைவியும், மாமனாருமாக இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் குறித்த நபரை படுகொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.