பாகிஸ்தானில் பயணிகள் பஸ் மீது லொரி மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பெஷாவர் நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த பஸ் கோஹாட் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலையில் உள்ள கோஹாட் சுரங்கப்பாதைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த லொரி ஒன்று பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடந்த 29ம் திகதி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாலத்தில் இருந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.