சுவிஸ்சர்லாந்து லுட்சேர்ன் மாநில துர்க்கை அம்மனுக்கு 05.04.2023 புதன்கிழமை 1008 சங்காபிசேகம்!

#Switzerland #Temple #Lanka4
Reha
1 year ago
சுவிஸ்சர்லாந்து லுட்சேர்ன் மாநில துர்க்கை அம்மனுக்கு 05.04.2023 புதன்கிழமை 1008 சங்காபிசேகம்!

சுந்தரமாய், அழகின் சூட்சுமமாய், சுவர்ண பூமியென போற்றப்படும் சுவிஸ்சர்லாந்தில் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள றூத் என்னும் பதியில் அமர்ந்திருத்து. அரசாளும் மங்கல ரூபினி சிறீதேவி துர்க்கை அம்மனுக்கு 1008 சங்குகளால் நடாத்தபடும் சங்காபிஷேகம் 05.04.2023 புதன்கிழமை நிகழ்ந்தேற இருக்கின்றது.

மாலை 3.00 மணியளவில் அம்பிகைக்கு நடைபெற இருக்கும் சங்காபிசேகத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய வரலாறு!

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழர்களின் வேதவாக்கு. இதற்கமைய, 1991ம் ஆண்டில் Emmenbrücke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில் நவராத்திரி விழாவின் போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபாட்டை ஆரம்பித்தனர். சுவிற்சலாந்தில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து பக்தர்களின் தொகையும் உயர்ந்தது. இதனையடுத்து லுட்சேர்ன் நகரில் St.Garli கத்தோலிக்க தேவாலயத்தின் அருகில் துர்க்கையம்மன் குடி கொண்டிருக்கும் கோவிலாக இது உயர்ந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சைவசமய வழிபாடுகளும் ஆன்மீக நற்சிந்தனை, கூட்டுப்பிரார்த்தனை என்பனவும் இங்கு நடைபெற்றது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி » என்பதற்கமைய, சைவசமயம், இன, மொழி, மத வரையறைகளைக் கடந்து அனைத்து மக்களையும் இணைத்து வழிபடுகின்ற கோவிலாக இது உயர்ந்து நின்றது.

1997ம் ஆண்டு ,கோவில் மக்கள் மயமாக்கப்பட்டு, பொதுநலச் சிந்தனை மிக்க நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருடைய வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியாகக் கருதும் தமிழினம் சமூகமாக ஒன்றிணைந்து. 2000 ம் ஆண்டில் மத்திய மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் Root என்னும் கிராமத்தில் ஆன்மீக, ஆகம விதிகளுக்கமைய பரிவாரமூர்த்திகள் பிரதிஷ்டை செய்யபட்டு, மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. இதையடுத்து பலராலும் அறியப்பட்ட அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயமாக இது முழுவடிவம் பெற்றது. இப்போது நாள்தோறும் நித்திய பூசையும், சிறப்பு பூசைகளும், அலங்காரத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

2019ம் ஆண்டு ஆலய வளாகம் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு மேலதிக இடவசதிகளோடு நவீனமயப்படுத்தப்பட்டது. மீண்டும் புதுப்பொலிவுடன் மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. கணிசமான இளையோர் இறைபணி ஆற்றத் தொடங்கியிருப்பதன் விளைவாகப் பிற மத,மொழி மாணவர்களின் சைவசமயத் தேடல்களுக்கான களமாகவும் இது திகழ்கின்றது. அத்துடன் பிற மதங்களைச் சார்ந்த குருமார்கள், பத்திரிகையாளர்கள், மதங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் போன்றோரும் இவ்வாவயத்துக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கான வழிகாட்டல்களையும், ஆன்மீக, ஆகம தெளிவூட்டல்களையும் இளைய தலைமுறையினர் செய்து வருகின்றனர்.

என் கடன் பணி செய்து கிடப்பதே  என்பதற்கமைய, பல்வேறு அறப்பணிகளை இவ்வாலயம் மேற்கொண்டு வருகின்றது. தமிழ் இளைஞர்களுக்கு, எமது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் நன்நெறி ஒழுக்கங்களையும் அறநெறி வாழ்வியலையும் புகட்டும் இலக்கோடு இவ்வாலயம் இயங்குகின்றது. அத்துடன், நலிவடைந்து, வலுவிழந்த எமது தாயக உறவுகளின் கல்வி, மருத்துவம், வாழ்வாதரம் போன்றவற்றுக்கான உதவித்திட்டங்களை துர்க்கை அறக்கட்டளை  என்ற இறைநாமத்துடன் முன்னெடுத்து வருகின்றது.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்  என்ற நோக்கில் அறப்பணிகள் பலவற்றை இடையறாது இவ்வாலயம் செய்து வருகின்றது. அறச்சிந்தனை உடையோர் யாவரும் இவ்வாலய அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற முன்வரலாம்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.