திருச்செந்தூர் அருகே திருமண ஆன 4 நாட்களில் புதுமண தம்பதி குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்கத்தில் சடலமாக மீட்பு..!
திருச்செந்தூர் மேலாத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரது மகன் பழனிக்குமார், கேரளாவில் இரும்புக் கடை நடத்திவருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டைச் சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும் கடந்த 10ந் தேதி தான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமண தம்பதிகள் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு வரை வீடு திரும்பி வராததால் கலக்கமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேட தொடங்கினர். புது மண தம்பதிகள் மாயமானது தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே, மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீர்தேக்கத்தில் தம்பதியர் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
நீரில் மூழ்கி புதுமண தம்பதிகள் உயிரிழந்தனரா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமண ஆன நான்கே நாட்களில் புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.