மலையகம் மாலை சூட வேண்டும் மாண்புறு வாழ்வைக் காண வேண்டும் - கவிதைத்தொகுப்பு

#Poems #Lifestyle #Tea #SriLanka #India #Lanka4
Kanimoli
1 year ago
மலையகம் மாலை சூட வேண்டும் மாண்புறு வாழ்வைக் காண வேண்டும் - கவிதைத்தொகுப்பு

மலையகம் மலைகளானது
மனங்களோ கண்ணீரைக் குடித்து வாழுது...!
தினம் தினம் வையகம் வாழுது
பயமும் நோயுடனும் இந்த பாதங்கள் வேகுது...!

காலையும் மாலையும் தேநீரில் சுவை
காலமறியாது உழைப்பதில் கழன்று விழுகிறது தொழிளார் இமை
காலாகாலமாக இறக்கி வைக்கமுடியா சுமை
இதுவும் தமிழனின் நீங்காத கண்ணீர் கதை.....!

கூலித் தொழிளாளிக்கே பிறக்கின்றான்
கூலித் தொழிளாளியாகவே இறக்கின்றான்
கூவி கூவி கதறி அழுதும்
மேவி அவன் வாழ்க்கை விடியவில்லை
மேதாவிகள் பலர் இருந்தும் மலையகத்திற்கு இன்னும் விடிவு இல்லை.....!

யுத்தம் ஈழத்தை தின்றது
முதலாளித்துவம் மலையகத்தை
தின்று கொண்டே இருக்கிறது
புத்தம் புத்தகத்தில் மட்டும் வாழ்கிறது
சத்தம் இல்லாமல் சர்வாதிகாரம் ஆள்கிறது....!

மண் சரிவைத் தான் கண்ட உலகம்
மனங்கள் எரிவை காணாத உலகம்- நடை
பிணங்களாக தலைமுறைகளின் பயணம்
ஏனோ ஏனோ கண்ணீரோடு முடியுது
மரணம்.......!

ஏற்றுமதியில் இலாபத்தை ஈட்டும் தேயிலை ரப்பர்
ஏற்றமே இல்லாது சுண்ணாம்பு அறையில் பல அப்பர்
இறக்குமதியில் எத்தனை எத்தனை கப்பல்
இன்றுவரை மலையகம் பொங்கவில்லை ஆனந்த பொங்கல்

முதலாளி முதலைகளின் கொடுர பற்களில் சிக்கிய ஜீவன்கள்
மூத்த குடிக்கு ஏன் இந்த பாவங்கள்
இலங்கை தேசத்தில் கரையும் தேகங்கள்
இந்த இதயங்களுக்கு இல்லையா மேகங்கள்....!

அரசு எனும் மூட்டைப் பூச்சிக்கு
யார் மருந்து வைப்பது....?
முரசு கரைந்து சிரசு வெடித்து
கண் முன்னே... கரையும் உறவுகளை
யார் கரை சேர்ப்பது......!

மலையகம்.... மாலை சூட வேண்டும்
மாண்புறு வாழ்வைக் காண வேண்டும்
பெரும் கலையகமாக மாற வேண்டும்
பாவம் செய்த தமிழகமே சாபத்தை
ஏற்க வேண்டும்.....!

நன்றி :- தங்கை வி. அபிவர்ணா
உன் சித்திரம் மனதை சித்திரவதை
செய்தது
மலையகத்துக்காய் வதம் செய்தது.....!