சபரிமலை, பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை செய்த நபர் மீது வழக்கு பதிவு

#Tamilnews #Breakingnews #Kerala
Mani
1 year ago
சபரிமலை, பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை செய்த நபர் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது.

இந்த பொன்னம்பலமேட்டில் ஒருவர் நுழைந்து பூஜை நடத்தும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது சபரிமலை கோவில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொன்னம்பலமேட்டில் பூஜைகள் நடத்தியது சென்னையை சேர்ந்த நாராயணன் என தெரியவந்தது.

நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர். அவர்கள் காட்டுக்குள் செல்ல வன ஊழியர்கள் சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்தது.

இதில் வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.