மனைவியின் ஆசையை நிறைவேற்ற எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 60 வயது நபர்

#India #wife #Old #Everest
Prasu
1 year ago
மனைவியின் ஆசையை நிறைவேற்ற எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 60 வயது நபர்

கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். 

அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷரத் குல்கர்னியும், அவரது மனைவி அஞ்சலியும் மலையேற்ற வீரர்கள். இருவரும் உலகின் உயரமான ஏழு சிகரங்களிலும் ஏற முடிவு செய்தனர். இதற்காக தீவிர பயிற்சி எடுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து 2019ம் ஆண்டு மே 22ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயாரானார்கள். ஆனால், மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார். 

அப்போது எப்படியும் சிகரத்தில் ஏற வேண்டும் என அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார். எனவே, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவு செய்தார். 

அதன்படி, மனைவி இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.