இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த சர்வதேச நாணய நிதியம்

#India #Food #IMF
Prasu
1 year ago
இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த சர்வதேச நாணய நிதியம்

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது வினியோகத்திற்கான அமைச்சகம், ஜூலை 20 அன்று 'பாஸ்மதி அல்லாத அரிசி' ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.

இந்த தடைகுறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி கிடைப்பது சவாலானதால், அங்குள்ள கடைகளில் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. 

இருப்பினும் மக்கள் முண்டியடித்து வாங்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas) கூறியிருப்பதாவது:- இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். 

எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது.