பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசால் விபத்து! பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியது

#India #Accident #fire #Tamilnews
Mani
1 year ago
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசால் விபத்து! பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியது

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கை ஒட்டி, குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.

நேற்று காலை, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததால், வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதைப் பார்த்ததும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேகமாக ஓடினர்.

இந்நிலையில், பெட்ரோல் பம்ப் மீது பட்டாசுகள் விழுந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

தீ விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடிப்பின் சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.