பூமி, நிலவை படம்பிடித்த சந்திரயான்-3 விண்கலம்

#Moon #Scientist #Rocket #Space #Photo
Mani
1 year ago
பூமி, நிலவை படம்பிடித்த சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் இமேஜர் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட பூமி மற்றும் நிலவின் படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று வியாழக்கிழமை வெளியிட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவியது.

ஆகஸ்ட் 1-ம் தேதி விண்கலம் பூமி சுற்றுப் பாதையை நிறைவு செய்தது. இதையடுத்து நிலவு சுற்றுப் பாதையை நோக்கிச் சென்றது. ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 7.15 மணியளவில் விண்லகம் வெற்றிகரமாக நிலவு சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது விண்கலத்தின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் எடுத்த பூமி, நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரின் அடிப்பகுதியில் உள்ள கிடைமட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

புகைப்படத்தில் நிலவில் காணப்படும் பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் முன்பகுதியிலுள்ள மற்றொரு கேமரா மூலம் பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட ஜூலை-14ம் தேதி விண்கலத்தில் உள்ள லேண்டர் இமேஜர் (எல்.ஐ) கேமரா மூலம் பூமியின் படம் எடுக்கப்பட்டது என்றும் நிலவின் படம் லூனார் ஆர்பிட் இன்சேர்சன் செய்யப்பட்ட அடுத்த நாள் (ஆகஸ்ட் 6) லேண்டர் கிடைமட்ட வெலாசிட்டி கேமரா (LHVC) மூலம் எடுக்கப்பட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.