மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

#SriLanka #Mannar #Event #Lanka4 #kanchana wijeyasekara
Kanimoli
2 years ago
மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

உள்ளூர் நிபுணர்களின் உதவியுடன் குறித்த காலத்திற்கு முன்னதாகவே பணிகளை நிறைவு செய்ததாக அரசாங்கம் பெருமை பேசிகொள்ளும், மன்னார் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தால் பாதிக்கப்பட்ட தமது வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு கோரி, அப்பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். விண்ட்போஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிருரெஸ் பவர் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவொட் மின்னுற்பத்தி நிலையம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்கள் தமது வாழ்வை சீர்குலைத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

images/content-image/1691998975.jpg

 மின் உற்பத்தி நிலையத்திற்காக 6 காற்றாலை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 2 கோபுரங்கள் மக்கள் வசிக்கும் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் மாத்திரமன்றி அன்றாட வாழ்விற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். காற்றாலை கோபுரங்கள் எழுப்பும் அதிக சத்தம் அப்பகுதியில் உள்ள மீன்பிடி தொழிலை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை போராட்டத்தில் கலந்து கொண்ட கிராமவாசி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

images/content-image/1691998985.jpg

 "காற்றாலை இயங்க ஆரம்பித்த நாள் முதல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானத்தை இழந்தனர். ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பாதித்தவர்கள் இப்போது 200 அல்லது 300 ரூபாயையே சம்பாதிக்கிறார்கள். சில நாட்களில் அதுவும் இல்லை. ஏனென்றால் இரண்டு காற்றாலை கோபுரங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ளன. இரவில் மக்கள் தூங்க முடியாது. குழந்தைகள், பாலூட்டும் தாய்மார், பாடசாலை செல்லும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

images/content-image/1691999003.jpg

 அப்பிரதேச மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் ஜனாதிபதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பல தடவைகள் தெரிவித்தும் எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை எனவும் தமது கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு காற்றாலை கோபுரங்களையாவது நிறுத்தி அல்லது அகற்றி மக்களின் அன்றாட வாழ்வை சுமூகமாக கொண்டுச் செல்ல வழிவகைச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காற்றாலை கோபுர பகுதியில் உள்ள சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

 "காற்றாலைகளின் சத்தத்தால், மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தலைவலியால் சிறுவர்களுக்கு இரவில் கல்வி கற்க முடியவில்லை. இரவில் சத்தம் அதிகம் என்பதால் கிராமத்தில் அனைவருக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது." காற்றாலையை செப்டம்பர் 2023 இல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், உள்ளூர் பொறியியலாளர்கள் அதன் பணிகளை விரைவாக நிறைவு செய்ய உழைத்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4