இலங்கையிடமிருந்து கச்சத்தீவு மீட்கப்படும் - மு.க.ஸ்டாலின்

#India #SriLanka #M. K. Stalin #kachchaitheevu
Prasu
1 year ago
இலங்கையிடமிருந்து கச்சத்தீவு மீட்கப்படும் - மு.க.ஸ்டாலின்

இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அருகே இன்று நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக மீனவர்கள் மீது 48 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

இதில் 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.83 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போது வரையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். 

இலங்கை அரசு பிடிபட்ட படகுகளை தரவும் மறுக்கிறது. இதற்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்படும் போதும் மத்திய அரசின் கவனத்துக்கு நாம் கொண்டு செல்கிறோம். அவர்களும் இலங்கை அரசிடம் வலியுறுத்துகிறார்கள். 

ஆனாலும் கைது நடவடிக்கை தொடர்கிறது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதற்கு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும். அது தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார் கலைஞர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் திமுக சார்பிலே நடத்தப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்ற அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

கச்சத்தீவு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு மூன்றாவது நாளில் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக. அப்போது இருந்து அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை தொடர்ந்து செய்கின்றனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.