'காதல் தேசம்' வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு!

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Tamilnews
Mani
2 years ago
'காதல் தேசம்' வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு!

காதல் தேசம் என்ற டைட்டிலுக்கு ஏற்ப பிரமாண்ட செட்களின் மூலம் கற்பனையை புகுத்தி நட்பும், காதலும் உலாவும் புதிய இடத்தையே உருவாக்கியிருப்பார்கள். நட்பு, காதலுக்கு மரியாதை அளித்த தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இது அமைந்துள்ளது. இதயம் படம் மூலம் கவனத்தை பெற்ற இயக்குநர் கதிர் அடுத்து உழவன் படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான ரியல் சம்பவங்களை வைத்து நட்பு, காதலும் கலந்த ஜாலியான படத்தை உருவாக்க நினைத்தார் கதிர். வெறும் ஐந்து நிமிட உரையாடாலின் மூலம் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனனை இம்ரஸ் செய்தார். அவரது பிரமாண்ட தயாரிப்பில் வினித் மற்றும் அறிமுக நாயகனாக அப்பாஸ், பாலிவுட் நடிகை தபுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, பிரதான காதபாத்திரங்களில் இவர்கள் நடிக்க காதல் தேசம் படத்தை உருவாக்கினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், ஐபிஎல் கிரிக்கெட் சிஎஸ்கே - மும்பை போட்டி போல் கல்லூரி வாழ்க்கையில் பகையாளியாக இருந்து வரும் லயோலா கல்லூரி - பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதலும், பின்னர் அவர்களுக்கும் ஏற்படும் நட்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படத்தை திரைக்கதை அமைந்திருப்பார். பணக்கார குடும்ப பின்னணியில் அப்பாஸ், எளிய பின்னணியில் வினித் ஆகியோருக்கு இடையே நட்பு மலரும் தருணம் முதல், அப்பாஸ் - வினித் ஒரே பெண்ணை காதலிப்பதால் நட்புக்குள் வரும் பிரிவு, இறுதியில் நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக அனைவரும் நண்பர்களாகவே தொடர முடிவு செய்வது என நட்புக்கும், காதலுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. படத்தின் கதை ரியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அதை காட்சி படுத்திய விதம் பிரமிப்பின் உச்சகட்டமாகவே இருந்தது. குறிப்பாக நமக்கு தெரிந்த இடங்களை கற்பனையுடன் கலந்து அழகான செட்களாக உருவாக்கி அந்த உலகத்துக்கே அழைத்து சென்றிருப்பார்கள். மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் கேவி ஆனந்துக்கு இதுதான் முதல் படம். தனது கண்களின் வழியே காட்சிகளை மிகவும் உயிரோட்டாகவும், கலர்புஃல்லாகவும் அழகுபடுத்தி காட்டினார். புதுமையான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை படம் முழுவதிலும் பார்வையாளர்களுக்கு உணர வைத்ததில் படக்குழுவினர் மெனக்கெடல் காட்சிக்கு காட்சி தெரியும்.

கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டமும், ஏக்கமும் கனவுகளும் கண்ணீரும் நிரம்பிய வாழ்வையும் திரையில் பதிய வைத்த படமாக இருந்த இந்த படம் அந்த காலகட்ட இளைஞர்கள் மட்டுமல்லாமல், தற்போதுள்ள ஜென்இஸட் தலைமுறையினராலும் ரசிக்ககூடிய படமாகவே இருக்கிறது. ஏனென்றால் எந்த காலத்துக்கும் பொருந்தும் நட்பும், காதலும் இதில் கையாளப்பட்ட விதமே காதல் தேசம் படத்தை இன்னும் பிரஷ்ஷான கதையாக வைத்துள்ளது. இந்த படத்தில் இடம்பிடித்த மற்ற கதாபாத்திரங்களான வடிவேலு, சின்னி ஜெயந்த், எஸ்பி பாலசுப்பிரமணியம், ஸ்ரீ வித்யா போன்ற பலரும் மனதில் பதியும் விதமாக அழுத்தமான காட்சிகளில் தோன்றியிருப்பார்கள். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுத, ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்று சொல்வதை காட்டிலும் இப்போது ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இடத்தை பிடித்துள்ளது எனலாம். மெலடியில் தொடங்கி ஃபாஸ்ட் பீட்டாக முடியும் கல்லூரி சாலை, ஓ வெண்ணிலா, தென்றலே தென்றலே, என்னை காணவில்லையே போன்ற போன்ற காதல் பாடல்களாகட்டும், நட்புக்கு தேசிய கீதமாக திகழும் முஸ்தபா பாடல் ஆகட்டும் ஒவ்வொரு தனித்துவம் கொண்டதாகவே உள்ளது. தமிழ் சினிமாவில் நியூ இயர் என்றால் சகலகலா வல்லவன் படத்தில் வரும் இளமை இதோ இதோ ஒலிப்பதுபோல், நட்பு என்றாலே உடனடியாக ஒலிக்கும் பாடலாக ஏஆர் ரஹ்மானே பாடிய முஸ்தபா உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4