கனேடிய பிரதமரிடம் தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கனடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக கனடாவில் இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக சீக்கிய சமூகத்தினர் புது டெல்லிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தனது கரிசனையை இந்திய பிரதமர் வெளியிட்டுள்ளார்.
G20 மாநாட்டில் பங்கேற்றிருந்த கனடிய பிரதமரிடம், இந்திய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையாளிக்கு கௌரவ செலுத்தும் வகையில் கனடாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி குறித்தும் இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கனடாவில் கருத்து சுதந்திரத்திற்கு பூரண அங்கீகாரம் உண்டு என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் வன்முறைகளுக்கும் குரோத உணர்வுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.



