இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவில் ஈடுபட கனடா விரும்புகிறது - ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த கனடா உறுதிபூண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இரு நாடுகளும் தூதரக உயர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மான்ட்ரேல் நகரில் நிருபர்களிடம் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. புவி அரசியலில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்தோ பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பின்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவுடன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்நாட்டுடன், ஆக்கப்பூர்வமான உறவில் கனடாவும், அதன் நட்பு நாடுகளும் ஈடுபடுவது முக்கியமானது என தான் கருதுவதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் கனேடிய பிரதமரின் இந்த கூற்று கனடா - இந்தியா இடையிலான முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பர்க்கப்படுகின்றது.



