நடிகை விசித்ரா மருத்துவமனையில் அனுமதி
தமிழில் தலைவாசல், தேவர் மகன், அமராவதி, ரசிகன், ஆத்மா, ஜாதி மல்லி, வீரா, வில்லாதி வில்லன், முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை விசித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரை துறையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா பிக்பாஸ் வீட்டில் சினிமா கால கசப்புகளைப் பகிர்ந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை விசித்ரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “வலி வாழ்க்கையை ஒரு கணம் நிறுத்துகிறது. மனித உடல் எவ்வளவு ஆற்றல் நிறைந்தது என்பதையும் உணர்த்திவிடுகிறது. ஒவ்வொரு காயமும் உயிர் பிழைத்தலுக்கான கதையை கொண்டுள்ளது. மருத்துவமனையில் நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவர்கள் என்னை சிறப்பாக பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும் விரைந்து குணமடையும் எனது பயணத்துக்கு உதவிகரமாக இருந்தது. இந்த நேரத்தில் என்னுடைய கணவர், குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னுடன் அன்பாக இருந்து, தொடர்ந்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை வலிமையுடனும் கருணையுடனும் தாங்கும் மக்களால் நீங்கள் சூழப்பட்டிருக்கும்போது மீள்வது என்பது எளிதாகிறது ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு என்ன அறுவை சிகிச்சை என்பது குறித்தெல்லாம் அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
(வீடியோ இங்கே )