கனேடிய துாதுவர்கள் வெளியேற்றப்பட்டதன் மெய்க்காரணம் வெளியாகியது

கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுள்ள உண்மைகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியதன் பேரில், இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது கனடா.
தொடர்ச்சியாக கனேடிய தூதரக அதிகாரிகள் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் கவலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, அவர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவித்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர், வியன்னா ஒப்பந்தத்திற்குட்பட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் வெளியாகியுள்ளது. அதாவது, சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு துணை தூதரகங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள கனேடிய தூதர்கள், தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, காலிஸ்தான் ஆதரவாளர்களாக அறியப்பட்ட குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு விசா வழங்குகிறார்கள் என இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கனேடிய தூதரக அதிகாரிகள் இதை வேண்டுமென்றே செய்துள்ளார்கள். அதற்குக் காரணம், குறிப்பிட்ட நபர்களை இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல விசா வழங்குவதுதான் என்று கூறும் அதிகாரிகள், வழக்குகளில் சிக்கியவர்களுக்கு கூட இந்த தூதரக அதிகாரிகளால் விசா வழங்கப்பட்டு, அவர்கள் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள்.
மேலும், சில சந்தர்ப்பங்களில், சிலரை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கும், கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை விசாரிப்பதற்கும் உதவ கனடா மறுத்துள்ளது. அத்துடன், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கனடா ஆதரவு அளித்ததற்கான ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக, இவ்வளவு காரணங்கள் இருப்பதாலேயே இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க, இந்திய அரசு முடிவு செய்ததாக தற்போது அரசு அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.



