கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 96 குடும்பங்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
துணை தபால் நிலையங்கள் உள்ளிட்ட பொது சேவை நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 1661 குடும்பங்களைச் சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (18.12) காலை 08.30 மணியளவில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ்வாறான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேசத்தில் 445 குடும்பங்களைச் சேர்ந்த 1452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 1216 குடும்பங்களைச் சேர்ந்த 3752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து வரும் நிலையில், புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர் நடவடிக்கைகள் காரணமாக, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



