முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படும் அவலம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படும் அவலம்!

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஸ் தெரிவித்தார்.  

முன்னாள் போராளி அரவிந்தன் எந்தவித வழக்கு பதிவுகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக புதுக்குடியிருப்பில் இன்றையதினம் (21.05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். அண்மையில் கூட அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் போராளியுமாகிய அரவிந்தன் பல மக்கள் சேவைகள் புரிந்து வந்த நிலையில் எந்த ஒரு வழக்குகளும் பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். 

முகநூலில் பதிவிட்டமை தொடர்பாகவே கைது செய்யப்பட்டதாக அறிந்தோம். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது என்னவென்றால் நாங்களும் இந்த நாட்டின் குடி மக்கள் தான். புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே நாம் விடுதலை செய்யப்பட்டோம். மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்.  

அரவிந்தன் எனும் முன்னாள் போராளியை வழக்கு பதிவு செய்யாமலே வைத்திருக்கின்றீர்கள். அவர் குற்றம் இழைத்திருப்பின் வழக்கினை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கினை. துரிதப்படுத்துங்கள். அதனை விடுத்து வேறு காரணங்களை கூறி எம் வாழ்வை கெடுக்காதீர்கள். அரசாங்கம் தான் எம்மை ஆயுதம் ஏந்த வைத்தது. 

இது சார்ந்து ஊடகத்தில் பகிரங்க விவாதம் செய்ய ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள், அரசு, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சவால் விடுகின்றேன். நாம் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. நீங்களே எம்மை தூக்க வைத்தீர்கள். எனவே அரவிந்தன் வெகு விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.  

கடந்த மாதம் 29ஆம் திகதி தேசிய புலனாய்வு துறையினர் என்னை அழைத்து புலம்பெயர் நாட்டவருடன் சேர்ந்து தாக்குதல் செய்ய போவதாக கூறி விசாரணைக்குட்படுத்தியிருந்தார்கள்.  இந்த கேள்விக்கு என்ன பதிலை கூறுவது? நாம் வாழ வழியின்றி இருக்கின்றோம்.  

நான் கூசா தடுப்பு முகாமில் இருக்கும் போது பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன். பிறப்புறுப்பு, மூக்கு , வாய் என உடற்பாகம் எல்லாவற்றிலும் அடித்து துன்புறுத்தியதன் பின்னரே நாம் விடுவிக்கப்பட்டோம். அதன் பின்னர் தாெழில் கூட எம்மால் செய்ய முடியாத நிலையில் நடைபிணமாக மனித உருவில் திரிகின்றோம்.  

சாதாரண அட்டை பண்ணையில் காவல் புரியும் என்னை அழைத்து இந்த கேள்வியை கேட்டால் நான் என்ன பதில் கூறுவது? அதன் பின்னர் எனக்கு அந்த வேலையும் இல்லை. இதற்குரிய பதிலை நான் யாரிடம் கேட்பது? புலம்பெயர் உறவுகளிடமும், முன்னாள் போராளிகளிடமும் நான் கேட்பது நீங்கள் விடுதலைபுலி எனும் பெயருடன் இயங்காதீர்கள். இயங்கினால் நாம் தான் இங்கே துன்பப்படுகின்றோம். 

அவ்வாறு இயங்குவதாக இருந்தால் தாயகத்திற்கு வாருங்கள் அனைவரும் சேர்ந்து இயங்குவோம். புலம்பெயர் உறவுகளிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் யார் விடுதலைப் புலிகள் என வருகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். 

இனியாவது நாங்கள் அனைவரும் தமிழனாக ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றுபடுவோமாக இருந்தால் உலகத்தில் பெரியதோர் வீரமிகு தியாக இனமாக காட்டலாம். இல்லையேல் அழிந்துவிடுவோம்”என மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4