சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்!!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்!!

எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நீ எதிர்ப்பாயாக, எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நீ ஆதரிப்பாயாக"" என்று ஒரு அரசியல் தத்துவார்த்த கூற்று உண்டு.

இதுதான் அரசியல் ராஜதந்திரத்தின் அகரவரிசை. அதை விடுத்து எதிரி எதை விரும்புகிறானோ அதை நாமே செய்வது என்பது நமது அழிவுக்கு நாமே குழியை வெட்டுவதாகும். இன்று இலங்கை அரசியலில் சிங்கள தேசம் தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. இதிலிருந்து பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்க வல்லது என்பதும் அது சிங்கள தேசத்துக்கு தீமை பயக்கக்கக் கூடியதோடு சிங்களதேசத்தை சிக்கலில் சிக்க வைப்பதாக அமையும் என்பதையும் வெளிக்காட்டி நிற்கிறது.

""முடிந்தால் குடும்பியைப் பிடி, முடியாவிட்டால் காலை பிடி"" என்றொரு சிங்கள பழமொழி உண்டு. அதை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் சிங்களத் தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

அதில் முதற்கட்டமாக சிங்கள அரசியல் தலைவர்கள் தாம் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாக கருதவில்லை என ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்பது உறுதியாகி வலுவடைகின்ற நிலையில் வடக்கு நோக்கி சிங்களத் தலைவர்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்தகால 8 ஜனாதிபதி தேர்தல்களின் போதும் எந்த ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளரும் வடபகுதிக்கு வந்ததே கிடையாது. ஆனால் இப்போது பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் மக்கள் நிறுத்தப் போவதாக அறிவித்ததும் சிங்கள தேசத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்க வடக்கில் ஆறு நாள் முகாமிட்டு தங்கினார். சஜித் பிரேமதாசாவும் அதே போன்று ஏழு நாட்கள் தங்கி நின்றார். அனுராகுமார திசாநாயக்காவும் நான்கு நாட்கள் தங்கி நின்று தமிழ் மக்களிடம் தமக்கு வாக்களிக்கும்படி வேண்டி நிற்கின்றனர்.

சிங்களத் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வடபகுதிக்கு வந்து முகாமிட்டிருந்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பது என்பது இலங்கை அரசியலில் அதிசயம்தான்! விந்தையிலும் விந்தைதான்!! ஆனாலும் இந்த அதிசயத்தை நிகழ வைத்தது சிங்கள பௌத்த மதங்கொண்ட யானையை தமிழ் பொது வேட்பாளர் என்ற அங்குசம்தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் கெஞ்சுகின்ற போது சிங்களத் தரப்பு மிஞ்சி நின்றது. இப்போது தமிழ் மக்கள் மிஞ்சி நிற்கின்ற போது சிங்களத் தரப்பு கெஞ்சி நிற்கின்றது. இதனை பார்க்கின்ற போது ""மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடாது"" என்ற தமிழ் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தமிழர் நிலத்திற்கு சிங்கள தலைவர்களின் படையெடுப்பு என்பது தமிழர்கள் தமக்குப் பின்னே நிற்கவேண்டும், அவர்கள் தனித்துவமாக நிற்கவும் கூடாது, தனித்துவமாக சிந்திக்கவும் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அத்தோடு தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டும் நிற்கக்கூடாது, கட்சிகளாக, பிரதேசங்களாக பிளவுபட்டு நிற்கவேண்டும். அவ்வாறு பிளவுபட்டு இருக்கின்ற போதுதான் தமக்குத் தேவையானவர்களை விலைக்கு வாங்கவும், தமக்கு தேவையானவர்களை கோடாலிக் காம்புகளாக பயன்படுத்தவும் முடியும். இதுவே சிங்கள அரசியல் சித்தாந்தமாக எப்போது உள்ளது.

ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களையும், கட்சிகளையும் ஐக்கிய படுத்துகிறது. தமிழ் மக்கள் ஒரு குரலாக ஒலிக்க முற்படுகிறார்கள். இதன் மூலம் சிங்கள தேசத்தோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழத் தயாரில்லை. அவர்கள் தனித்துவமாகவே வாழ முற்படுகிறார்கள் என்ற செய்தியை சொல்வதன் ஊடாக தமிழர்கள் சர்வதேச அரசியலை நோக்கி வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்து விடுவார்கள் என சிங்கள தேசம் அச்சப்படுகிறது.

இதன் அடுத்து அடுத்த கட்டமாக இப்போது சிங்கள தேசத்தின் ஊடகங்கள் தமிழ் பொது வேட்பாளரை இனவாதத்தோடு சித்தரிக்க தொடங்கி விட்டன. ஆகவே தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களின் அரசியலில் மிகச்சரியான முடிவே என்பதையே இது சுட்டி நிற்கிறது.

கொழும்பின் பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் ""Ex-LTTE combatants among those seeking common Tamil presidential candidate""- 26 ஜூன் 2024 அன்று செய்தி வெளியிட்டுள்ளது . இந்த செய்திக்கு பின்னே உள்ள அரசியலும், இனவாதமும், தமிழர்கள் மீதான தென்னிலங்கை ஊடகங்களின் வன்மங்களும் தெளிவாக வெளிப்படுகிறது.

""பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை கோருபவர்களில் முன்னாள் புலிப் போராளிகளால் உருவாக்கப்பட்ட கட்சி, எதிர்வரும் தேர்தலில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும்."" எனச் சொல்கின்றது. இவ்வாறு சொல்வதன் மூலம் சிங்கள தேசத்தில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை 'புலிப் பயங்கரவாதம்' என்ற சாயத்தை பூசி தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டச் செய்வதுதான் அடிப்படை நோக்கமாகும்.

அதாவது ஏற்கனவே சிங்கள தேசத்தில் புலிகள் பற்றிய கட்டமைக்கப்பட்ட கருத்தான 'புலிகள் பயங்கரவாதிகள்' என்றும், அவர்கள் ஜனநாயக விரோத சக்திகள் என்றும், சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட கருத்து சிங்கள மக்களின் ஆழ்மனதில் வலுவாக பதியப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் புலிகள் முன்னிற்கிறார்கள் என்றால் சிங்கள மக்கள் மத்தியில் இதற்கான பெரிய எதிர்ப்பு அலை அணி ஒன்றை ஏற்படுத்துவதும், சிங்கள தரப்பில் புலிகளை வெல்லக்கூடிய ராஜதந்திரம் மிக்க ஒருவரை சிங்கள மக்கள் தெரிவு செய்வதற்கான அரசியல் கருத்தியல் சூழலை உருவாக்குவதும்தான் இதனுடைய முதலாவது நோக்கமாக அமைந்திருக்கிறது.

சிங்கள மக்களின் பார்வையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்றபோது அதனை புலிகள் எனக் குறிப்பிட்டு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை சிங்கள மக்கள் எதிர்த்து மறுக்கின்ற கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டது. இதன் மூலம் சிங்கள தேசத்தில் இனவாத பூதத்தை மீண்டும் கிளப்பிவிட தென்னிலங்கை ஊடகங்கள் முற்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவதை கண்டு சிங்களத் தலைவர்கள் மாத்திரம் அச்சப்படவில்லை சிங்கள ஊடகங்களும், சிங்கள கருத்திருவாக்கிகளும், சிங்கள ராஜதந்திரங்களும் அச்சப்படுகிறார்கள் என்பதையே மேற்படி செய்தி வெளிக்காட்டி நிற்கிறது.

கடந்த 8 ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களின் பின்னே நின்றதையோ அல்லது சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்ததையோ வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே வழக்கம்போல தமிழ் மக்கள் இந்த சிங்களத் தலைவர்களுக்கு பின்னே நிற்பார்கள் அல்லது விரும்பியோ விரும்பாமலோ இவர்களுக்கு வாக்களிப்பார்கள். தமிழர்கள் மரமாக நிற்காமல் சிங்களம் என்ற மரத்தில் பற்றிப் படரும் படர்கொடி போலவே இலங்கை தீவில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற சிங்கள தேசத்தின் கனவு தமிழ் பொது வேட்பாளர் என்ற முடிவோடு உடைக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் சுயமாக முடிவெடுத்து மரமாக எழுந்து நின்று விருட்சமாக வளர்வது சிங்களத் தலைவர்களால் பொறுக்க முடியாதுதான்.

முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை 2010 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நிறுத்த வேண்டுமென அவுபூர்வமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்கும் நிலைப்பாட்டையே தமிழ் அரசியல்வாதிகள் எனப்படுவோர் எடுத்து இதனையே தமிழ் மக்கள் மீது திணித்து சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டி நின்றனர்.

ஆனால் அந்நிலை இன்று மாற்றப்பட்டுவிட்டது. இது சிங்களக் கட்சிகளோடு ஒத்தோடிகளாக இருந்த தமது தனிநலன்களை சுவீகரித்துக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பலத்த அடியாகவே அமைந்துவிட்டது.

தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தலைவர்கள் என்று கூறி அவர்களை நிராகரித்து தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்யக் கூடியவர்கள் என்று ஆதரித்த அனைத்து சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும் கடந்த காலங்களில் முதுகிலேயே குத்தி இருக்கிறார்கள்.

இத்தகைய கசப்பான வரலாற்று உண்மைக்கும், படிப்பினைக்கும் பின்னர்தான் இன்றைய அரசியல் சூழமையில் தமிழ் மக்கள் தமது இறைமையை தாமே கையில் எடுபதற்கும், தமது ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கும், இலங்கை அரசியலில் தமது ஜனநாயக உரிமையின் வகிபாகத்தை வெளிப்படுத்துவதற்கும், தமிழ் மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கும், தமிழ் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாக ஜனாதிபதி தேர்தல் அமைந்து காணப்படுவதனால் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவதற்கு தமிழ் அறிவுசார் சமூகம் சரியான நேரத்தில் சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

தமிழ் மக்களின் அரசறிவியல் முதிர்ச்சியின் அரசியல் செயற்பாட்டு முனைப்பின் ஆரம்பத்தை, அதன் கருத்தியலை முளையிலேயே கிள்ளுவதற்கு சிங்கள தேசம் முனைகிறது. கடந்த நூறு ஆண்டுகால தமிழ் அரசறிவியல் சமூகத்தின் அரசியல் கருத்தியல் அரசியல் மயப்படுத்தப்படாமல், அரசியல் செயற்பாட்டுக்கு கொண்டு செல்லப்படாமல், கருத்தியலோடு நின்றதுதான் கடந்த 100 ஆண்டு கால தமிழ் மக்களின் அரசியல் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படை காரணங்களை அலசி ஆராய்ந்ததன் வெளிப்பாடு முதற்கட்டமாக ஒரு அரசறிவியல் கருத்து செயற்பாட்டுத்தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோட்பாடு அரசியல் மயப்படுத்தப்பட்டு செயற்பாட்டுக்கு வந்திருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றதேயன்றி தமிழ் மக்களுடைய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. அது ஜனநாயக ரீதியான போராட்டமாக வாக்குகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டமாக பரிணமித்துள்ளது. இதனை முடக்குவதற்கு சிங்கள தேசம் எத்தகைய விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். அதற்காக தமிழ் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கவும், அரசியல் கட்சிகளை இரண்டாக உடைக்கவும், அரசியல் கருத்தியலில் மாறுபட்ட கருத்து உடையவர்களை தம்முடன் இணைக்கவும், அல்லது பின் கதவால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்கவும் சிங்கள அரசியல் தரப்பு எப்போதும் முற்படும். அதனை இப்போது தமிழ அரசியல் பரப்பில் வெளிப்படையாக காண முடிகின்றது.

ஒரு கட்சியின் இரண்டு தலைவர்கள் மாறுபட்ட கருத்தோடு இருப்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீதரன் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறார். கட்சித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரன் சிங்களத் தலைவரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிடுகிறார். இங்கே தென்னிலங்கை அரசியல் எவ்வாறு தமிழ் கட்சி ஒன்றினை இரண்டாக உடைப்பதனையும், தமிழ் மக்களின் ஐக்கியத்தை உடைப்பதில் எவ்வாறு உறுதியாக செயல்படுகிறார்கள் என்பதையும் நிரூபிப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதுமானது.

தமிழ் மக்களிடையே உள்ள சில தீய சக்திகளும், குழப்பவாதிகளும், சிங்களத்தின் கையாட்களும் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அந்நிய சக்திகளின் குறிப்பாக இந்தியாவின் நிகழ்ச்சிநிரல் என்றும் ஊளை இடுகின்றனர். இங்கே அரசியல் வரலாற்று அர்த்தத்திலும், தத்துவார்த்த அர்த்தத்திலும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள தேசியக் கட்சிகள் எதுவாயினும் இந்தியாவின் பக்கம் ஒருபோதும் நிற்கப்போவதில்லை. நின்றதும் கிடையாது. ராஜபக்சக்களின் அணியினராயினும் சரி, ரணிலின் அணியினராயினும் சரி, சஜித் பிரேமதாசா அணியினராயினும் ஜேவிபி அணியினராயினும் சரி அல்லது பௌத்த மகா சங்கத்தினர் ஆயினும் சரி அவர்கள் ஒருபோதும் இந்தியாவின் பக்கம் நிற்கப் போவதில்லை அடிப்படையில் இவர்கள் அனைவரும் இந்தியாவை தம்முடைய பொது எதிரியாகவும் முதன்மை எதிரியாகவும் கருதுபவர்கள். இவர்களுடைய அரசியல், மத, தத்துவவியல் என்பது அடிப்படையில் இந்திய எதிர்ப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டனவே.

எனவே இவர்கள் இந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் பக்கம் நிற்கப் போவதில்லை. நிற்கவும் மாட்டார்கள். இங்கே யார் பதவிக்கு வந்தாலும் தமது தேவைக்கு ஏற்ப அவ்வப்போது இந்தியாவுடன் கூட்டு சேர்வதாக அல்லது அவர்களுடன் ஒத்துழைப்பதாக ஒரு பாசாங்கை காட்டுவார்கள். எத்தகைய நிலைமையிலும் தமது நலன்களை அடைவதற்காக 'ஓரடி பின்னேயும் ஈரடி முன்னேயும் ' என்ற நடைமுறையைத்தான் சிங்களவர் பின்பற்றுவார்கள். தமது நலன்கள் அடையப்பட்டுவிட்டதும் அவர்கள் எதிரணியில் மீண்டும் வந்து நிற்பார்கள். இதுவே கடந்த 2300 ஆண்டுகால இலங்கை-இந்தியா வெளியுறவுக் கொள்கையின் நீண்ட வரலாறாகும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவதில்லை. அத்தோடு பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழ் மக்கள் ஐக்கிய படுவதனாலும் இந்தியாவுக்கு எந்த நன்மையும் கிட்ட போவதில்லை. இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கின்றது என்று கூறுபவர்கள்தான் பொதுவேட்பாளர் என்பது இந்தியா பின்னே இருக்கிறது என்கிறார்கள். இங்கே முரண்னகை இருப்பதை காணலாம். இவர்கள் கூற்றுப்படி தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா இருக்கிறது என்றால் அது தமிழ் மக்கள் ஐக்கிய படுத்துவதை எவ்வாறு விரும்பும்? தமிழ் மக்கள் பலம் பெறுவதை இந்தியா ஏன் ஆதரிக்க வேண்டும்? இவ்வாறு இந்தியா நிற்கின்றது என்று சொல்பவர்கள் தமது கனவுகளில், கற்பனைகளில் சிந்தித்து வாய்க்கு வந்தபடி பேசட்டும். ஆனால் வரலாற்று நடைமுறையில் இவை அர்த்தமற்ற கற்பனாவாதங்களே.

இந்தியா இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நாடு என்ற அடிப்படையில் இயல்பாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியா மீது அச்சம் எப்போதும் இருக்கும். ஆனால் இந்தியாவை பொறுத்தளவில் அது தனக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு குட்டி நாடாகவே இலங்கையை பார்க்கிறது. இந்த அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இலங்கையை நயத்தாலோ, பயத்தாலோ தனது மேலாண்மைக்கு கீழ் தொடர்ந்து வைத்திருக்கலாம் என இந்திய ஆட்சியாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பக்கம் இந்தியா நிற்பதற்கான எந்தத் தேவையும் கிடையாது.

ஆனாலும் நடைமுறையில் இந்தியா-இலங்கை நீண்ட வெளியுறவு கொள்கை வரலாற்றில் இந்தியாவினால் இலங்கையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கை தனது வெளியுறவு கொள்கையில் ராஜதந்திர உத்திகளால் எப்போதுமே இந்தியாவை வெற்றி கொண்ட வரலாற்றையே கடந்த 2300 ஆண்டுகால இலங்கை வெளியுறவு கொள்கை வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமது படை, பட்டாளம், கோட்டை, கொத்தள இராணுவ பலத்துடன் நின்று அரசிற்கு எதிராகப் போராடும் திட்டத்துடன் புலிகள் ஜனாதிபதித் தேர்தலைபகிஷ்கரித்தார்கள் . அது ஒரு பலம்சார்ந்த போராட்டத் திட்ட.துடன் நிகழ்ந்தது. ஆனால் இன்று தேர்தல் பகிஷ்கரிப்பு என்பதன் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதும், தமிழ் மக்களின் இறைமையை மறுப்பதும், சிங்கள தலைவர்களின் வெற்றியை இலகுபடுத்துவதுமான செயல்பாடாகவே தேர்தல் பகிஷ்கரிப்பு அமையும். அடிப்படையில் இது சிங்கள தேசத்திற்கு சேவகம் செய்யும் அரசியலாகவே அமைந்துவிடும்.

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குறிப்பிட்டுச் செல்லக்கூடிய தேசியம் பேசும் கட்சிகளில் எட்டு கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. ஒரு கட்சியின் அரைவாசினர் ஆதரவு நிலையை எடுத்துள்ளனர். ஆகவே எட்டரைக் கட்சி ஆதரவு நிலையில் உள்ளன. ஒரு கட்சி பகிஸமகரிப்பு என்ற நிலை எடுத்துள்ளது. ஆக மொத்தத்தில் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குறிப்பிடக்கூடிய 11 கட்சிகளில் பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஒன்பது கட்சிகளில் எட்டரை கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளனர் என்பது தமிழ் மக்களின் அரசியல் ஐக்கியத்தில் ஒரு கணிசமான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. எனினும் இவற்றின் செயற்பாடுகள், உள்ளக முரண்பாடுகளை கழைதல் என்பவற்றில் நீண்ட தூரம் முன்னேறி பயணிக்க வேண்டியது என்பதும் உண்மைதான்.


நன்றி : தி. திபாகரன்,M.A.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!