கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று நடந்த முறைகேடான சம்பவம்: வெடிக்கவுள்ள போராட்டம்

#SriLanka #Kilinochchi #Hospital
Mayoorikka
1 year ago
கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று நடந்த முறைகேடான சம்பவம்: வெடிக்கவுள்ள போராட்டம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்றையதினம் கண் சிகிச்சை பிரிவில் முறைகேடான சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுனர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு விசேடமாக பார்வையிடும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

  இன்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவில் இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து தெரியவருவதாவது,

விசேட வைத்திய நிபுனரிடம் காண்பிப்பதற்காக தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்கள் இவ்வாறு வரிசை நடைமுறையை பின்பற்றாது அழைக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற ஏழைகள், போக்குவரத்து உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

 வெளிநோயாளர் பிரிவில் நீண்ட வரிசையில் நின்ற பின், கண் சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்படுகின்றனர். மீண்டும் அங்கு தொடர் இலக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், குறித்த வரிசை நடைமுறையை பின்பற்றாது, தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றனர்.

 அவர்களிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வைத்தியர்கள் பார்வையிடுகின்றனர். சிகிச்சைக்காக சென்ற ஏழை நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தூர இடங்களிலிருந்து செல்லும் ஏழை நோயாளர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றனர்.

 பணம் கொடுத்து சிகிச்சை பெறும் மக்களிற்கான சோதனையை அரச செலவில் மேற்கொண்டு பணம் சம்பாதிக்கும் சுகாதார துறையினர், முறையான வரிசை நடைமுறையையேனும் பின்பற்ற வேண்டும். இந்த நிலை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதனால் அப்பாவி ஏழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். வடக்கு மாகாணத்தில் மருத்துவ துறையில் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு அரச செலவில் இலாபமீட்டும் வைத்தியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 வசதி வாய்ப்புக்களுடன் தனியார் வைத்தியசாலைகளை நாடுபவர்களுக்கு அங்கேயே பரிசோதனையும், சிகிச்சையும் இடம்பெற வேண்டும். ஏழைகளுக்காக வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் செயற்பாடு பல பகுதிகளிலும் நடைபெறுகிறது. 

பணத்தினைப் பெற்று அரச செலவில் சத்திர சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 மக்களிற்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் இலவச மருத்துவம் இலவசமாக மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாதிருக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் இலவச சிகிச்சைக்காக செல்லும் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். 

உரிய வரிசை நடைமுறைகள் பின்பற்றப்படுவதை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதுடன், விசேட வைத்திய நிபுனர்களை சந்திக்க தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினால் சிபாரிசு செய்யப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 இதனால், பின் தங்கிய பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் இலவச மருத்துவ சேவையை முழுமையாகவும், உரிய முறையிலும், தாமதமின்றியும் பெற்றுக் கொள்ளும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்

 இதேவேளை குறித்த சம்பவமானது முறைகேடானதும் வெட்கத்திற்குரிய விடையமாகவும் தனியார் வைத்தியசாலைகளின் வியாபாரத்திக்கிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் இதன்காரணமாக சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கிளிநொச்சி மக்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் கிளிநொச்சியிலுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4