பழனி பஞ்சாமிர்தத்தில் மாமிசம் இல்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்

#India #God #Food
Prasu
3 hours ago
பழனி பஞ்சாமிர்தத்தில் மாமிசம் இல்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்

இந்தியாவில் அமைந்துள்ள பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு காணப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் குறித்தும் வதந்தியை பரப்பினர்.

இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவற்றை கலந்து விற்ற AR Foods நிறுவனத்திடமிருந்தே பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் கொள்முதல் செய்யப்படதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு, பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு காணப்படுவதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது. 

அத்துடன், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. 

 எனினும், திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை.” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.