அரசாங்கம் அமைப்பதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்கொள்ளவுள்ள சவால்கள்!

#SriLanka #AnuraKumara
Mayoorikka
3 hours ago
அரசாங்கம் அமைப்பதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்கொள்ளவுள்ள சவால்கள்!

நாடு அனுராவோடு என்ற தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த தலைவர் தான் அணுரகுமாரதிசாநாயக்க. 

இவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே மிக முக்கியமான விடயங்களாக இனப்பரம்பலை மாற்றுகின்ற குடியேற்றங்களுக்கு தடை அதாவது தமிழர் பகுதிளில் சிங்கள குடியேற்றங்களுக்கு தடை, பயங்கரவாத சட்டம் நீக்கப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர், வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் உறுதி செய்யப்படும், வடக்கு கிழக்கில் படுகொலை ஆட்கடத்தல் காணாமல்ஆக்கப்டல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற பலவாறான வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் மொழிந்தவர் தான் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.

 இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை இவர் ஒன்று இரண்டையாவது செய்து முடிப்பாரா அல்லது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து முடிப்பாரா? அவ்வாறு செய்தால் பெரும்பாண்மையின மக்களான சிங்கள மக்களிடம் இவரது செல்வாக்கு பெருகுமா? என்ற விடையங்கள் இவருக்கு முன் இருக்கும் சவால்களாக அமைகின்றன. 

சிலவேளைகளில் பொதுத் தேர்தலிற்கு முன்னதாக இவர் இந்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேறுவதற்கு எத்தனிக்கலாம் அவ்வாறு த்தனிக்கும் நிலையில் அவருக்கு முன்னால் பல சவால்கள் வந்து குவியும். குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் ஆகக் குறைந்தது 113 ஆசனங்களை ஒரு கட்சி பெற வேண்டும். அவ்வளவு ஆசனங்களை தனி ஒரு கட்சியால் எடுக்க முடியாது. ஆகவே ரணிலை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசாவினுடைய ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் 113 ஆசனங்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

ஆனால் ஊழல் வாதிகளை இணைத்துக் கொள்ள மாட்டோம் என இவர் பல தடவைகள் கூறிவந்துள்ளார். அவ்வாறான சூழ்நிலையில் பழையவர்களை விட ஊழல்மோசடி அற்ற புதியவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும். சஜித் பிரேமதாசவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால் சஜித் பிரேமதாச பிரதமராகவும் முடியும். 

இப்படி ஒரு அரசியல் நிலை ஏற்படுமானால் அனுரகுமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இருப்பதில் முரண்பாடுகள் எழும் 2001 இல் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது ஏற்பட்ட ஆபத்தான நிலைமைதான் இவருக்கும் ஏற்படலாம். அப்படி இல்லையேல் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி மலையகத் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் போன்ற சிறிய பாரம்பரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாத்திரமே 113 என்ற ஆசனங்களைப் பெற முடியும். ஜே.விபியாகத் தனித்துப் போட்டியிட்டால் 113 சாதாரண பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை அமைப்பதில் சிரமங்கள் ஏற்படும். 

மலையகத் தமிழர்கள் - முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் ஜேவிபி தமது உறுப்பினர்களை போட்டியிட அனுமதித்தாலும் அவர்கள் வெற்றி பெறுவது கடினம். ஆகவே அனுரகுமார திஸாநாயக்கா எதிர்கொள்ளவுள்ள பல சவால்களில் இது முக்கியமானது. ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் புரிந்த அரசியல் கட்சிகள் மற்றும் நபர்களை இணைக்கவே கூடாது என்ற நல்ல சிந்தனையோடு இருக்கும் ஜேவிபிக்கு இப் பின்னணியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிரமங்கள் உண்டு. நாடாளுமன்றத்தில் தோ்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் உத்தியில் கட்சிக் கொள்கையில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்யக்கூடிய மன நிலை அனுராவுக்கு உடனடியாக வரக்கூடிய சாத்தியம் இருக்காது.

 குறிப்பாக மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், ஜீவன் தொண்டமான் போன்ற தலைவர்களை உடனடியாக உள்வாங்கும் எண்ணம் அனுரகுமாரவுக்கு இருக்கும் என்று சொல்லவும் முடியாது. அதேநேரம் டக்ளஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், கருணா ஆகியோரை வேறு வகையாகக் கையாளும் உத்திகளும் வகுக்கப்படலாம். அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படலாம். 

 ஏனெனில் வடக்குக் கிழக்குத் தமிழர்களை இலங்கை ஒற்றையாட்சி முறைமைக்குள் கரைத்துவிட வேண்டும் என்பது தென்பகுதி அரசியலின் ஒரு பகுதி. ஆனாலும் அனுராவின் அரசாங்கத்தில் மலையகத் தமிழர்கள் முஸ்லிம்கள் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற முடியுமா என்ற சந்தேகமும் எழுகின்றது. அப்படியாயின் இவர்களுடன் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும். 

ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலையை அனுரகுமார திசாநாயக்க அனுமதிக்கப் போவதில்லை. கட்சியின் கொள்கையே இதற்கு முக்கிய காரணம். ஜேவிபி கட்சியைப் பொறுத்தவரையில் நபர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தினை விட கட்சிக்கே அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 இவ்வாறானசூழ்நிலையில் அனுரகுமார திசாநாயக்க பொதுத் தேர்தலில் எவ்வாறானதொரு பின்னணியில் போட்டியிடப் போகின்றார்   சவால்களை  எல்லாம் முறியடிப்பாரா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.