தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவை!

#SriLanka
Mayoorikka
1 year ago
தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவை!

எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

 இது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். 

 எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகாரம் அற்றவை. எனிலும் சிறிலங்காவினால் நடாத்தப்படுகின்ற தேர்தல்களையும், நாடாளுமன்றத்தினையும் தமிழீழ விடுதலைக்கான களங்களாக, கருவிகளாக கையாளவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. தற்போதைய சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால தேர்தல்முறை இல்லை. 

நாம் தேர்தல் முறையினை புத்திகூர்மையுடன் கையாள்வதன் மூலம் சிங்களபௌத்த பேரினவாதத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்துவதன் மூலம் உலகின் கவனத்தினை நாம் ஈர்க்க முடியும். தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்பவர்கள் சிங்கள நாடாளுமன்றத்தினை எவ்வாறு தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்துவார்கள் என்பதனை முன்னரேயே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முயன்று வருகின்றது. எனவேதேசிய மக்கள் சக்தி தற்காலத்தில் முன்வைக்கும் தனிநபர் சமத்துவம், இலங்கையர்கள் என்ற கோட்பாடுகள் என்பன, கோத்தா முன்வைத்த கோட்பாடுகள். 

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை தொடர்ச்சியாக பேணி வருவதானது, தமிழ் மீதான அடக்குமுறைக்கு சான்றாக அமைகின்றது. கூட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலே தனிநபர் உரிமைகளை அனுபவிற்பதற்கான சூழல் உருவாகும். 

இன்று சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம் என்பது அரசியல் ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு கூறுவது போல், சின்ன மீனும் பெரிய மீனும் சமன் என்று கூறாலம். ஆனால் யாதார்தத்தில் பெரிய மீனே சின்ன மீனை விழுங்கும். சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் அல்ல. சிங்கள தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காது நிராகரிப்பது தமிழர் நலன் நோக்குநிலில் இருந்து அவசியமானது உட்பட சிங்களத் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் அரசியல் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை மறுதலிப்பதுடன், சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தலைமையேற்றுச் செய்யும் கட்சிகளாக இவை இருக்கின்றன் இருக்கப் போகின்றன.

 இத்தகைய சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பின், அது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானதாகும்.

 மேலும் தமிழ்பிரதிநிதிகளாக செல்பவர்கள் தமிழீழ தேசியத்தினை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் தேசம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணயம் போன்ற நிலைப்பாடுகளில் சொல்லிலும் செயலிலும் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

 அரசியல், சமூக வாழ்வில் தூய்மையானவர்களாகவும், சமூக நீதி வழி நின்று செயற்படுபவர்களாகவும், பெண்கள், இளையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுப் வகையிலும் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையூடாக நீதி கோரல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் வாக்களிக்கும்போது கவனத்திற் கொள்ள வேண்டியவை.

 நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் மேம்பாட்டுக்கு எத்தகைய செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ்த் தேச வளர்ச்சிக்கு செயற்படக்கூடிய தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.

 இத்தகையதொரு, தேசியப் பேரியக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் காலதாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4