66 ஆவது வயதில் 10 ஆவது குழந்தையை பிரசவித்த பெண்!

பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார்.
அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது.
இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித்திருக்கிறார்.
இதுகுறித்து அலெக்சான்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். 2 மணி நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மது பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியதே இல்லை” என்றார்.
இந்தப் பெண் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா நமுக்வாயா என்ற பெண், 70-வது வயதில் ஐவிஎப் மூலம் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



