லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவேந்தல் குருதிக்கொடை நிகழ்வு

பிரித்தானியா - லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இருமுறை முன்னெடுத்துவரும் குருதிக்கொடை நிகழ்வின் 2025ம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறையும் லண்டன், லெஸ்டர், பேர்மிங்காம் மற்றும் ஸ்கொட்லாண்ட் பகுதிகளிலுள்ள குருதிக்கொடை நிலையங்களில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசின் முப்படைகளாலும் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்த்தப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் எம் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை செய்தியை எதிர்கால எம் சந்ததிக்கு கடத்திச் செல்லும் முகமாகவும், குறித்த இறுதி யுத்த காலப்பகுதியில் எம் மக்கள் குருதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு இறந்துபோன துயரத்தையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு மிகப்பெரும் தேசியம் சார்ந்த கடமையாக ஒவ்வொரு ஆண்டு மே மாதத்தின் முள்ளிவாய்க்கால் வாரத்தில் இந்தக் குருதிக்கொடை நிகழ்வானது மக்களால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது.
மே மாதத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வோர் ஆண்டும் எம் தமிழீழ தேசத்தின் உன்னத வீரர்களான மாவீரர்களின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி, கார்த்திகை மாதத்தின் மாவீரர் வாரத்திலும் ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ இவ்வாறான குருதிக்கொடை நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமான வகையில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றமையையும் இந்தவேளையில் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அந்தவகையில், மே மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஸ்கொட்லாண்ட் பிரதேசத்திலும் 17, 18ம் திகதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் லண்டன் வெஸ்ட்பீல்ட் பகுதியிலுமாக 150ற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் எமது இந்தக் குருதிக்கொடை நிகழ்வானது பிரித்தானிய வாழ் ஈழத்தமிழ்ப் புலம்பெயர் உறவுகளின் மிகப்பெரும் ஆதரவுடன் இம்முறையும் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



