செம்மணிப் புதைகுழிகளில் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை ஐ.நா. வலியுறுத்துகின்றது!

#SriLanka #Jaffna #UN #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
செம்மணிப் புதைகுழிகளில் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை ஐ.நா. வலியுறுத்துகின்றது!

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமையவும் பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஆதரித்துள்ளது.

 “உண்மையை வெளிக்கொண்டு வரும் திறன் கொண்ட தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் நடத்தப்படும் விரிவான, வலுவான விசாரணைகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வலி மற்றும் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே பாரிய மனித புதைகுழிகள் விடயத்தில் செய்ய வேண்டிய விடயம்” என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணம், செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழிகளுக்கு அருகில் தெரிவித்த கருத்துடன் கூடிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, நாட்டிலுள்ள உள்ள அனைத்து மனித புதைகுழிகளிலும் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

 “விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி முழுமையாக நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம், சர்வதேச தரத்திற்கு அமைய சர்வதேச மேற்பார்வையின் கீழ் மனிதப் புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறது. எனினும், நேற்றைய தினம் (ஜூன் 25) ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழிக்கு வருகை தந்ததை உள்ளூர் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க பொலிஸ் தடை விதித்திருந்தது.

 மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் புதைகுழியை ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதிக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருந்ததாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறு குழந்தைகள் உட்பட 19 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்ட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது புதைகுழி சட்டவிரோதமானதாகவோ அல்லது இரகசியமாகவோ புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சிகளை நடத்தும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

 புதைகுழியை பார்வையிட்ட பின்னர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், செம்மணி புதைகுழிகளுக்கு அருகில் ‘மக்கள் நடவடிக்கை’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான ஐ.நா. தலையீட்டைக் கோரும், ‘அணையா விளக்கு’ போராட்ட இடத்திற்குச் சென்று, பொதுச்சுடருக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்னதாக நேற்று காலை (ஜூன் 25) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார்.

 கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் திருகோணமலைக்குச் செல்லும் வழியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்து, தமிழர் இனப்படுகொலை, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், நில அபகரிப்பு, மனித புதைகுழிகள், இராணுவமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த ஆவணங்களை ஒப்படைத்தனர்.

 திருகோணமலையில் சிவில் சமூக ஆர்வலர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய உயர் ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் செல்வதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரையும் சந்தித்ததாக கிழக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஜூன் 25ஆம் திகதி செம்மணி புதைகுழியை ஆய்வு செய்ய யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்னர், உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சர்வதேச இடம்பெயர்வு அலுவலகத்தின் (IOM - UN Migration) பிரதிநிதிகள், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல அரசியல்வாதிகளைச் சந்தித்ததாக வடக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 மாலை வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலுக்குச் சென்ற அவர், பின்னர் மாலை 7 மணியளவில் இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750976006.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4