வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

#SriLanka
Mayoorikka
6 hours ago
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

 தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 அதன்படி, இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விடயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களிடமிருந்து பல கோரிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளோம். 

 அதற்கமைய, இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் மோடியின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 சுதந்திரத்திற்குப் பின்னரான ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பானது, திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ளார். 

 உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான, தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது மற்றும் தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலையும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

 அத்துடன், மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுவதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்று தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 அத்துடன், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆகவே, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும், இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்        

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!