1 இலட்சம் படையினர் 2026 FIFA உலகக்கிண்ணத்திற்காக மெக்சிகோவைச் சுற்றி குவிப்பு!
2026 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், மெக்சிகோ தனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், உலகக்கிண்ண காலப்பகுதியில் சுமார் 100,000 பாதுகாப்புப் படையினரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மெக்சிகோவின் உலகக்கிண்ண ஒருங்கிணைப்பு மையத்தின் தலைவர் ஜெனரல் ரோமன் வில்லால்வாசோ பாரியோஸ், பாதுகாப்புத் திட்டம் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20,000 வீரர்கள், 55,000 காவல்துறை அதிகாரிகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்: மீதமுள்ள பணியாளர்கள் மற்றும் இதர பாதுகாப்பு அதிகாரிகள் என சுமார் 99,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம், மெக்சிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நெமெசியோ "எல் மென்ச்சோ" ஒசெகுவேரா இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இந்த சூழலில், உலகக்கிண்ணத்தை எவ்வித அச்சுறுத்தலுமின்றி வெற்றிகரமாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் மெக்சிகோ அரசு உள்ளது. "மெக்சிகோ பாதுகாப்பான நாடு என்பதை உலக நாடுகளுக்கு நிரூபிப்பதும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதும் எங்களது இலக்கு" என்று ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பணிகளில் இராணுவத்தின் பயன்பாடு அதிகரிப்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சில விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மெக்சிகோ அரசு தனது இந்த மெகா பாதுகாப்புத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்பது உலகக் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )