ஈரான் போருக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!
ஈரான் மீதான போருக்காக நிதி வழங்குவதை நிறுத்துமாறு கோரி, அமெரிக்காவின் முக்கிய பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டுக் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உள்நாட்டில் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பில்லியன் கணக்கான டொலர்கள் இந்தப் போருக்காகத் திசைதிருப்பப்படுவதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக 'பப்ளிக் சிட்டிசன்'அமைப்பின் இணைத் தலைவர் ரொபர்ட் வைஸ்மேன் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையைக் கொண்டு சுமார் 4 மில்லியன் மக்களுக்குத் தேவையான உணவுச் சலுகைகளை வழங்கியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பென்டகனுக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதி, சட்டவிரோதமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போரை மேலும் நீடிக்கவும் தீவிரப்படுத்தவுமே உதவும் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம், ஒக்ஸ்பாம் அமெரிக்கா, தேசிய செவிலியர் சங்கம்,கிரீன்பீஸ் மற்றும் அமைதிக்கான யூதக் குரல் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட செல்வாக்குமிக்க அமைப்புகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய 'ஒபரேஷன் எபிக் பியூரி' போர் காரணமாக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், போருக்கான செலவினங்கள் அமெரிக்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
(வீடியோ இங்கே )