25 நாட்களைக் கடந்த நாடு தழுவிய இணைய முடக்கம்!
ஈரானிய அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய இணைய சேவை முடக்கம் இன்றுடன் (மார்ச் 24) 25 ஆவது நாளை எட்டியுள்ளதாக சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பான 'NetBlocks' தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த இணைய முடக்கம் தற்போது 576 மணித்தியாலங்களைத் தாண்டியுள்ளது. இது ஈரானிய வரலாற்றில் மிக நீண்ட கால இணைய முடக்கமாக பதிவாகியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டமிட்ட முடக்கத்தினால் ஈரான் நாட்டு மக்கள் வெளிவுலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் அல்லது அவசர அறிவிப்புகளைப் பெறுவதற்குக் கூட வழியின்றி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைட் லிஸ்ட்' எனப்படும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
இதன் மூலம் செய்திகளைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்க ஈரான் அரசு முயற்சிப்பதாக 'NetBlocks' அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டே இணையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் குரல் சர்வதேச மட்டத்தை எட்டவிடாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்