நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்திய புதிய அறிக்கை.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யை சுமார் 286 அமெரிக்க டொலர் வரை கொடுத்து கொள்வனவு செய்திருக்கலாம் என HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்கத்திய ஊடகங்களில் மசகு எண்ணெய்யின் விலை 100 முதல் 110 டொலர் வரை இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆசிய நாடுகளுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய்யின் உண்மையான விலை அதைவிடப் பல மடங்கு அதிகம் என எல்ஹெடரி சுட்டிக்காட்டினார். "தற்போது மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய்யைப் பெறுவதற்கு 140 முதல் 150 டொலர்கள் வரை செலுத்த வேண்டியுள்ளது.
நான் கேள்விப்பட்ட மிக உயர்ந்த விலை இலங்கையில் ஒரு பீப்பாய்க்கு 286 டொலர்களாகும்," என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் இந்த நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால் வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது எனவும், ஈரானிய எண்ணெய்க்கு எதிராக அமெரிக்கா கடல்வழித் தடைகளை விதித்துள்ளமையும் இந்த விலை அதிகரிப்புக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், செங்கடல் ஊடாக எண்ணெய்யைக் கொண்டுவருவதற்கான கப்பல் கட்டணம் ஒரு பீப்பாய்க்கு 30 - 40 டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், காப்புறுதி கட்டணங்களும் 0.25 வீதத்திலிருந்து 5 வீதம் வரை உயர்ந்துள்ளன.
சவூதி அரேபியா தனது யான்பு (Yanbu) துறைமுகம் ஊடாக ஏற்றுமதியை முன்னெடுத்தாலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகள் இத்தகைய புவிசார் அரசியல் மோதல்களால் பாரிய விலை அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்கா தனது கடல்வழித் தடைகளை நீக்காவிட்டால் செங்கடலையும் முடக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது உலகளாவிய எரிசக்தி சந்தையில் மேலும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )