இணையவழி நிதி மோசடி : 37 சீன பிரஜைகள் கைது!
இலங்கையில் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உள்பட 37 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஒழுக்கக்கேடு ஒழிப்புப் பணிப்படை மற்றும் தலங்கம பொலிசாரின் ஒழுக்கக்கேடு ஒழிப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் அவர்கள் தங்கியிருந்த தலங்கம பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 டெஸ்க்டாப் கணினிகள், 37 டேப்லெட்டுகள், 147 கைபேசிகள், 100 சிம் கார்டுகள் மற்றும் 2,100 வெளிநாட்டு சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சாதனங்கள் அனைத்துடன் அந்த வீட்டையும் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 37 சீன நாட்டினரும் மூன்று மாத சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வந்து சட்டவிரோதமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் இணையம் வழியாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டார்களா, ஹேக்கர்களாகச் செயல்பட்டார்களா அல்லது பிற இணையக் குற்றங்களில் ஈடுபட்டார்களா என்பதைத் தீர்மானிக்க மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்புடைய விசாரணைகளுக்காக சீல் வைக்கப்பட்ட வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கணினிகள் மற்றும் கைபேசிகள், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )