மண்சரிவு அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை: மலையக ரயில் பாதையை மீளமைக்கத் திட்டவட்டம்.
டிட்வா' (Ditwah) சூறாவளி காரணமாகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான மலையகத் தொடருந்து பாதையை மீளமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
97 இடங்களில் பாரிய சேதங்கள் சமீபத்தில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் மருதானை முதல் பேராதனை வரையான பிரதான தொடருந்து பாதையில் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக, மண்சரிவுகள், மண் அரிப்பு, பாறைகள் சரிந்து விழுந்தமை, பாலங்கள் மற்றும் மதகுகள் சேதமடைந்தமை என மொத்தம் 97 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
தொடருந்து திணைக்களத்தின் அதீத முயற்சியால், பாதிக்கப்பட்ட 97 இடங்களில் 92 இடங்கள் ஏற்கனவே முழுமையாக மீளமைக்கப்பட்டுள்ளன. தற்போது எஞ்சியிருக்கும் 5 இடங்களில் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரம்புக்வெல்ல மற்றும் கடுகன்னாவ ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ஐந்து பகுதிகளிலேயே தற்போது சிக்கலான புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான கற்கள், மண் மற்றும் ஏனைய மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதற்காக மே 3ஆம் திகதி முதல் ரம்புக்வெல்ல மற்றும் கடிகமுவ இடையே விசேட சேவைத் தொடருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகின்றது.
களத்தில் NBRO மற்றும் பொறியியலாளர்கள் இந்த மீளமைப்புப் பணிகளின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விசேட பொறியியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.
எதிர்காலத்தில் மண்சரிவு அபாயங்களைக் குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்புகளைப் பயன்படுத்தி இந்தப் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மீளமைப்புப் பணிகள் மிகவும் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் மலையகப் பாதையில் வழமையான தொடருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
(வீடியோ இங்கே )