இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு எதிராக தற்கால சூழலுக்கு ஏற்ற கவிதை
உறுமும் புலிக்கொடி பறந்த
கரிகாலன் தேசத்தில்
கோடம்பாக்கத்து சினிமாக்காரன்
கொடி பறக்குது
சேவல்கள் அல்ல
செல்கள் கூவி விடிந்த தேசத்தில்
தபால்காரனின் விசில்கள் கூவி
பட்டாசு வெடிகள் வெடிக்குது
நடிகர் வென்று விட்டாராம்
நமக்கு ஈழம் வந்து சேரப்போதாம்
இலட்சியத் தளபதிகளால் முடியாததை
இளையதளபதி வென்று தரப்போறாராம்
பாவம் தலைவர்
பதினாறு வயதில்
மோதிரத்தை விற்று
இன்றைய இளசுகள் போல
கைபேசி வாங்காமல்
கைத்துப்பாக்கி வாங்கி தொடங்கிய
விடுதலைப் பயணம் இது
செல்லக்கிளி அம்மான்
மாடு விற்ற காசை வைத்து
நாடு பிடிக்க புறப்பட்டார்
பல்கலைப் படிப்பை பாதியில் விட்டு
திலீபன் தின்னாது இறந்ததும்
உடலை ஆயுதமாக்கி
உயிராயுதமான மில்லர்
உலகத்தை மிரள வைத்ததுவும்
அங்கயற்கண்ணி மாலதிகள்
அஞ்சாது களமாடி
வாகை சூடியதும்
முறிந்து கால் போன போதும்
முடங்கிக் மூலையில் கிடக்காமல்
தமிழ்ச்செல்வன் தாண்டி தாண்டி
தடைகள் பல தாண்டி
தரணியெங்கும் போராட்டத்துக்கு
அரசியலில் வலுச் சேர்த்ததுவும்
காயம் பட்ட காலோடு
களமாடிய பால்ராஜும்
ஈழப் பெருங்கடலை
இரவு பகலாய் கட்டியாண்ட சூசையும்
அந்நியத் தலைவர்களை
வன்னிமண் தேடி
வரவைத்த வாய்மைமிக்க
அன்ரன் பாலசிங்கமும்
மலிவான பேரங்களுக்கு
மயங்கி விலைபோகாமல்
வீரத்தோடு நின்ற தலைவனும்
இலட்சியத் தலைவன் பின்னால் நின்ற ஈழத்துதமிழர்களும்
அல்லல் ஆயிரம் பட்டு
அல்லும் பகலும் அயராது
அன்னை மண்ணைக் காத்த
மாவீரர்களும் வாழ்ந்த
மண் இது இது
சினிமாவுக்காக
கதாசிரியர்களான
பஞ்சு அருணாசலமோ
சுஜதாவோ எழுதிய
கற்பனைக் கதையல்ல
கண் முன்னே
கண்ணீரும் இரத்தமும் தோய்ந்து
நடந்தேறிய
காவியக் கதையிது
ஆமைக்கறி கதை விடும் சீமானும்
ஆட்டம் போடும் சினிமாக்காரனும்
உன் கனவை நனவாக்கி
விடமாட்டார்கள் என்ற
உண்மை யதார்த்தத்தை நம்பு
வலிமை மிக்க புலிகளால் முடியாதது
வாய்சொல் போலிகளால்
என்றும் முடியாது
திரள்நிதியில் தின்று கொழுத்தவனும்
திரையொளியில் ஜொலித்தவனும்
நமக்கென்ற ஒரு நாடல்ல
ஒரு வீட்டைக் கூட கட்டித்தர
இவர்களால் முடியாது
அவர்கள் வேறு
நாங்கள் வேறு
இதைப் புரிந்தால்
உனக்கும் உண்டு ஒரு வரலாறு
நன்றி: காந்தன் கவிதைகள்
(வீடியோ இங்கே )