காணாமல் போன பருத்தித்துறை, கற்கோவளம் மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்!
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பங்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்து அவர்களின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தேன்.
இந்த துயரமான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிமையில் இல்லை என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன். அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சும் அவர்களுடன் தொடர்ந்து நிற்கும். காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளக்கூடிய பொருளாதார மற்றும் சமூக சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
பிள்ளைகளின் கல்வி தேவைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்களில் முன்னுரிமையுடன் செயற்படுவோம். கடலில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும், உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே முடிவுகளுக்கு வர வேண்டும். இதற்கு முன்னர் தென்னிலங்கையில் இடம்பெற்ற இதேபோன்ற சம்பவத்தில், பல மாதங்களின் பின்னர் மீனவர்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அனுபவமும் எமக்கு உள்ளது.
எனவே, நம்பிக்கையை இழக்காமல் அனைத்து சாத்தியமான வழிகளிலும் தேடுதல் மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணையாக இருப்பதும், அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும் எமது பொறுப்பாகும்.
(வீடியோ இங்கே )
