"ஜனாதிபதி அநுரவின் மகன் தகுதிப் பரீட்சையின்றி எப்படி நுழைந்தார்?" – விமல் வீரவன்ச காரசாரக் கேள்வி!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மகன் கசுன் திஸாநாயக்க, எவ்வித தகுதிப் பரீட்சைகளும் இன்றி மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களுக்குள் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறித்து ஆராய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பல்வேறு விவகாரங்களைக் கையிலெடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்ததில் உள்ள தவறுகளை மட்டுமே ஆணைக்குழு தேடித்தேடி ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கடந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில், அவருடைய மகன் கசுன் திஸாநாயக்க எவ்வித தகுதிப் பரீட்சைகளும் இன்றி 'மிஹின் லங்கா' நிறுவனத்திற்குள் நுழைந்தார்.
பின்னர், மிஹின் லங்கா நிறுவனம் மூடப்படும் போது, கசுன் திஸாநாயக்கவிற்கு மாத்திரம் 'ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்' நிறுவனத்தில் இணைவதற்கான வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது? இது குறித்து விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குத் தேவையில்லாமல் போயுள்ளது." எனச் சாடினார்.
எதிர்பாராத விதமாகக் கிடைத்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தையும் சமூக ஒழுக்கங்களையும் குழிதோண்டிப் புதைத்து, எந்தவொரு கீழ்த்தரமான வேலைக்கும் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் இத்தகைய அராஜக செயற்பாடுகளை நிரூபிப்பதற்கு நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் தயாராக இருக்கின்றன என்றும் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே