சிறையமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் முதலீடு செய்யவும் ஐ.நா அழைப்பு!
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறையைத் தொடர்ந்து, நாட்டின் சிறை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்ய இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டதை அவர் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் நேற்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், குறைந்தது 27 பேர் உயிரிழந்த மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறை குறித்து ஐ.நா. ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா. தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியது.
சிறை அதிகாரிகளின் பொறுப்புகளையும், கைதிகள் மீதான அரசின் கடமையையும் எடுத்துரைத்த ஐ.நா., சீர்திருத்தப் பணியாளர்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்வதில் சவாலான கடமைகளைச் செய்கிறார்கள் என்றும், கைதிகள் அரசின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் உள்ளனர் என்றும் கூறியது.
உயிரிழந்த அல்லது காயமடைந்த கைதிகள் அரசின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் இருந்தனர். சிறை அமைப்பில் பணியாற்றுபவர்களும், அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அதிக பாதுகாப்பிற்குத் தகுதியானவர்கள். அந்தப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் அடிப்படைக் கடமையாகும்,” என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறை அமைப்பில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களும் முதலீடுகளும் தேவை என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்றும், குறிப்பாக நெரிசல், காலாவதியான நடைமுறைகள் மற்றும் போதுமானதாக இல்லாத தடுப்புக்காவல் நிலைமைகள் உள்ளிட்ட நீண்டகாலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை ஆராய ஒரு சுயாதீனக் குழுவை நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஐ.நா. வரவேற்றதுடன், அதன் கண்டுபிடிப்புகள் சிறை நிலைமைகளில் நீடித்த முன்னேற்றங்களைக் கொண்டுவர உதவும் என்றும் நம்பிக்கை வெளிப்படுத்தியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே