டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு!
கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ (Ditwah) புயல் மற்றும் அதனுடன் இணைந்த கடும் அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் விவசாயத்துறை மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருந்தது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் நோக்கில் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் ஒரே கட்டமாக 1,230 கோடி ரூபாவிற்கும் (12,341.5 மில்லியன்) அதிக தொகை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
புயலால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட 148,000 ஏக்கர் நெல் வயல்களைக் கொண்ட 116,278 விவசாயிகளுக்கு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் 8,888.5 மில்லியன் ரூபாய் ஏற்கனவே நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் நட்டத்திலிருந்து மீண்டு, அடுத்த போகச் செய்கைக்குத் தயாராக முடிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உப பயிர்கள் மற்றும் மரக்கறிச் செய்கையாளர்களுக்கும் பாதுகாப்பு நெற்செய்கைக்கு மாத்திரமன்றி, மகாவலி வலயங்கள் மற்றும் மாகாண எல்லைகளுக்குள் சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட ஏனைய உப பயிர்கள் மற்றும் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு புயலால் பாதிக்கப்பட்ட 85,747 விவசாயிகளும் இந்த இழப்பீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக 3,453 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு மீள் எழுச்சி அளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் விசேட இழப்பீட்டு வீதங்கள் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன:
நெற்செய்கை: ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1,50,000/-
மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள்: ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2,00,000/-
இந்த நிதியுதவிகள் அனைத்தும் எவ்வித இடைத்தரகர்களுமின்றி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகவே வைப்பிலிடப்பட்டு வருவதாக கமத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே