கன்னியாவில் புத்த விகாரை கட்டப்படாது: சமூக ஊடக வதந்திக்கு குகதாசன் மறுப்பு
கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு பகுதியில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த பகுதியில் புத்த விகாரை உள்ளிட்ட எந்த புதிய சமயக் கட்டடமும் நிர்மாணிக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து தமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அந்தப் பகுதியில் காணப்படும் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும், மதக் கட்டட நிர்மாணத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டதாகவும் சண்முகம் குகதாசன் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் அதனைச் சூழவுள்ள தொல்பொருள் பகுதியில் எந்த சமயக் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் ஊடாக தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சண்முகம் குகதாசன் கூறினார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், உண்மையான நிலைமை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே