இலங்கையை உலுக்கும் 214 பில்லியன் ரூபா மெகா மோசடி!
இலங்கையில் இதுவரை கண்டிராத மாபெரும் நிதி மோசடி குறித்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளன.
போலி ஆவணங்கள் மூலம் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாயில் 214.7 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன? வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 'டெலிகிராபிக் ட்ரான்ஸ்பர்' (TT) முறையில் பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிற்கு எந்தவொரு பொருளும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
105 போலி நிறுவனங்கள்: 2023 முதல் 2024 வரையான காலப்பகுதியில் 105 நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன. 55 சூத்திரதாரிகள்: இந்த 105 நிறுவனங்களையும் வெறும் 55 நபர்களே பின்னணியில் இருந்து இயக்கியுள்ளனர்.
13 முன்னணி வங்கிகளில் உள்ள 227 கணக்குகள் மூலம் சுமார் 24,300 முறை பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒருவரே 43 நிறுவனங்களை நடத்தி 43 மில்லியன் டொலர்களைக் கடத்தியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு: இந்த நிதி மோசடியின் பின்னணியில் துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் நிலையில், இன்டர்போல் உதவியுடன் இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சில வங்கி அதிகாரிகளின் துணையுடனேயே இந்த மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்ததால், இது குறித்து விரிவானவிசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே