இலங்கை டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு!
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது உபாதைக்கு உள்ளான ரவீந்திர ஜடேஜா முழுக் குணமடைந்து மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், உபாதை காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான சாராந் ஜெயின் முதன்முறையாக இந்திய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அணியின் தலைவராக சுப்மன் கில்லும், துணைத் தலைவராக கே.எல். ராகுலும் செயற்படவுள்ளதுடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தூத் படிக்கல் மற்றும் சாராந் ஜெயின் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, சாய் சுதர்சன் மற்றும் பும்ரா ஆகியோரின் பங்கேற்பு உடற்தகுதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும் நான்கு நாள் பயிற்சிப் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 முதல் 19 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 முதல் 27 வரையிலும் நடைபெறவுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே