நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை!
பண்டாரவளையில் காவல்துறை அதிகாரிகள் இருவரைத் தடுத்து வைத்து, அச்சுறுத்தித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரின் சுற்றுவட்டப் பகுதியில், காவல்துறை ஜீப் வண்டி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கடமையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தல் விடுத்ததுடன், அவர்கள் மீது உடல்ரீதியான தாக்குதல்களையும் நடத்தியதாக சமிந்த விஜேசிறி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளின் முடிவில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே