உயர்தரப் பரீட்சை - மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கு தடை!
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாடவிதான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு நாளை (04.08) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதிவரை 2532 பரீட்சை நிலையங்கள் ஊடாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு இணங்க 2013.06.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1816 ஆம் இலக்க வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக, பரீட்சாத்திகளுக்கான தனியார் வகுப்புகளை ஏற்பாடு செய்தல் நடத்துதல், பாடம் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல்,வினா பத்திரங்களை அச்சிடுதல் அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாப்பத்திரத்தில் உள்ள வினாக்களை தருவதாகவோ அல்லது அதற்குச் இணையான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாதனைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் அல்லது அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நபரோ அல்லது நிறுவனமோ இந்த கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கவனத்திற் கொள்ளாது செயற்படின் அந்த நபர் அல்லது நிறுவனம் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
எவரேனும் இந்த கட்டளைகளை மீறிச் செயற்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம்.
அல்லது பொலிஸ் தலைமையகம்,(011 2421111) பொலிஸ் அவசர பிரிவு (119) அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி அழைப்பு எண்( 1911) பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை (0112784208 / 0112784537) ஆகிய இலக்கங்கள் ஊடாக முறைப்பாடளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே