டித்வா புயல் கால உதவியை மலையகம் மறக்காது – எஸ். யோகராஜா
டித்வா புயலால் மலையகப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது, கிழக்கு மாகாண மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வழங்கிய மனிதாபிமான உதவி, ஆறுதல் மற்றும் ஒத்துழைப்பை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். யோகராஜா தெரிவித்துள்ளார்.
சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் விசேட பாராட்டு நிகழ்வு நுவரெலியா லேக் வியூ கார்டன் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் நுவரெலியா வருகை, ஒரு சாதாரண ஊடக நிகழ்வாக மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான சந்திப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இயற்கை அழகும் சுற்றுலா வளமும் கொண்ட கிழக்கு மாகாணம், பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகள், தலைவர்கள், கவிஞர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை உருவாக்கியுள்ள மண் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சந்திப்புகள் எதிர்காலத்தில் இரு பிராந்திய மக்களிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகளை நுவரெலியா மாநகர சபையில் தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும், சமூக முன்னேற்றம் மற்றும் ஜனநாயக வலிமைக்கு ஊடகத்துறை வழங்கும் பங்களிப்பை பாராட்டிய அவர், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே