நீதிபதிகள் ஓய்வுப்பெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் - அஜித் பி.பெரேரா
நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் அனுமதித்துக்கொள்ள முடியாது. அதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கும் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித்பி பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்க, அந்த துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடாமல் எடுக்கும் முயற்சி, எமது அரசியலமைப்பின் 107ஆவது உறுப்புரையான நீதிமன்ற சுயாதீனத்தில் கை வைப்பதாகும்.
அதனால் இந்த முயற்சியை நிறுத்த வேண்டும் என எமது நீதிபதிகள் அனைவரும் உறுப்பினர்களாக இருக்கும் சர்வதேச நீதிபதிகளின் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 21 மாதங்களாகியும் நீதிமன்ற செயற்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் ஒரு சட்டமூலத்தையேனும் இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதிக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட அனைத்து சட்டமூலங்களும் கடந்த அரசாங்கங்கள் சமர்ப்பித்தவைகளாகும்.
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, நாட்டில் இருக்கும் 11லட்சம் வழக்குகளில் 8 லட்சம் வழக்குகள் நீதிவான் நீதிமன்றங்களிலே காணப்படுகின்றன.
நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் யாரும் ஓய்வுபெறுவதில்லை. அவர்கள் ஓய்வுபெறுவதாக இருந்தால், மேல் நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திலாகும். அதனால் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தவே நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதாக தெரிவிக்கும் விடயம் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
அதனாலே நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் சாட்சி விசாரணை மேற்கொண்டு அதுதொடர்பில் பரிந்துரை ஒன்றை பெற்றுக்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சிகள் பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு கையளித்திருக்கிறது.
அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையை உண்மையாக மேற்கொள்வதாக இருந்தால், இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை விரைவாக நியமித்து, 3மாதங்களில் அந்த குழுவின் பரிந்துரையை பெற்றுக்கொண்டு அதனை பாராளுமன்றத்தில் அனைவரும் ஏகமனதாக அனுமதித்துக்கொள்வோம் என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே