இன்றைய வானிலை: சில பகுதிகளில் 100 மி.மீ-க்கும் மேல் கனமழை எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே