கர்நாடகாவில் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு குறித்து முக்கிய சந்திப்பு!
அன்த்ரோபிக் நிறுவனத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவு தலைவர் மைக்கேல் செல்லிட்டோ தலைமையிலான மூத்த சர்வதேச பிரதிநிதிகள் குழு, கர்நாடக மாநிலத்தின் விதான சௌதாவில் மாநில அரசின் உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.
இந்தச் சந்திப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, நிதி ஆலோசகர் எல். கே. அதீக் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
சந்திப்பின் போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்கால பயன்பாடுகள் மற்றும் அதன் மாற்றத்திறன் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சி, திறன் மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் கர்நாடகாவின் AI பல்கலைக்கழக முயற்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்கள் அனைவரையும் சென்றடையும் வகையிலும், பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய முறையிலும் அதன் வளர்ச்சியை முன்னெடுக்க கர்நாடக அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாநிலத்தின் புதுமை மற்றும் தொழில்நுட்பச் சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில், சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டாண்மை முயற்சிகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே