அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்? தீவிரமடையும் நற்பணி மன்ற பணிகள்!
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவரது நற்பணி மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிய கிளைகளைத் தொடங்கவும், உறுப்பினர்களைச் சேர்க்கவும் அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்களில் "தலைவர் தனுஷ்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு.
சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், நிழற்படம் எடுத்தோம் என்று மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள்.
அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், தனுஷ் விரைவில் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் இயக்கத்திலும், இயக்குநர் வெற்றிமாறனின் 'தமிழ் முருகன்' திரைப்படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே